குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை: புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

Sheron
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின்படி, பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருபது ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (11.01.2024) சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரகாரமே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி, நெடுஞ்சாலையிலோ அல்லது பொது இடத்திலோ மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் தொடர்புடைய குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு இந்த தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இந்நாட்டில் மாத்திரமன்றி விமானம் அல்லது கப்பலில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலத்தின்படி கொலை, காயம், பணயக்கைதிகள் அல்லது கடத்தல் ஆகியவை குற்றமாகும்.
மேலும் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் விளைவிப்பது, பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை உருவாக்குவது மற்றும் எந்தவொரு மத அல்லது கலாச்சார சொத்துக்களையும் அழிப்பது அல்லது தீவிரமாக சேதப்படுத்துவது ஆகியவையும் குற்றமாகும்.
அத்துடன் இந்த சட்டமூலத்தின்படி, கொலைக் குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |