எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிக்கவும், நிகழ்நேர தரவைப் பகிரவும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செயலியை பரீட்சிக்கும் நடவடிக்கை பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் வாகனங்களை கண்காணிப்பதற்கான செயலியானது இலங்கை பொலிஸாரின் தொழில்நுட்ப பிரிவினால் உருவாக்கப்பட்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த செயலி ஊடாக வாகனமொன்று ஒரே நாளில் பல தடவைகள் எரிபொருளை நிரப்புமாயின் அதன் விபரங்கள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பகிரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.