இலங்கையின் புதிய பிரதமரால் முடியும்! அமெரிக்காவின் நம்பிக்கை!
புதிய பிரதமர் உட்பட அரசாங்கத்தினால், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் முடியும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் விரும்பும் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுத்து நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கை-அமெரிக்கா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தப்படும் என்று தாம் நம்புவதாகவும் ஜூலி சுங் தெரிவித்தார்.
இதன்போது இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தனது நன்றியைத் தெரிவித்தார்.
அமெரிக்க துாதுவராக நியமிக்கப்பட்ட பின்னர், சுங் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையிலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.