பாகிஸ்தான் - சீனா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகள் இணைந்து அமைக்கும் புதிய திட்டம்
பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகள்,புதிய பிராந்திய அமைப்புக்கான திட்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சார்க் என்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்துக்கு மாற்றான அமைப்பாக செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று அமைப்பு
ஏற்கனவே சார்க் அமைப்பில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
இந்தநிலையில், இந்த மாற்று அமைப்பு தொடர்பில், ஆராயும் முகமாக, சீனாவின் குன்மிங் என்ற இடத்தில், கடந்த 19ஆம் திகதியன்று பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஸ் அதிகாரிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது இந்தியா உட்பட்ட ஏனைய சார்க் அமைப்பு நாடுகளையும் தமது அமைப்பில் இணைவதற்கான அழைப்பை விடுப்பது என்று குறித்த நாடுகள் தீர்மானித்துள்ளன.
எனினும், மூன்று நாடுகளுக்கிடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல என்று பங்களாதேஸின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.