இலங்கை அரசின் புதிய நடவடிக்கை மீது யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ண நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் கடந்த மே மாதம் 20 திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள யஸ்மின் சூக்கா, “இந்த நகர்வானது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதியினை வழங்குவதற்கான எந்த வாய்ப்பினையும் இல்லாது செய்கின்றது” என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இது கடினமான ஒரு விடயமாகும். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டார் என ஐ.நா விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு அதிபராக இருந்தவர் தற்போது காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்கின்றார்.
இவர் திட்டமிட்ட பொலிஸ் சித்திரவதை போன்ற ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்வங்களிலும் கட்டளைப் பொறுப்பு வகித்தமைக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் உலகளாவிய சட்ட மேலாதிக்க வழக்குகளுக்கு முகம் கொடுக்கும் ஆபத்தில் உள்ள ஓர் உயர் அரச அதிகாரி ஆவார். காணாமல் போனோர் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள ஓர் நாட்டில் காணாமல் போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சம்பவங்களை விசாரிப்பதற்குப் பொறுப்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நியமிக்கப்படுகின்றது.
As IGP, Jayantha Wickremaratne derailed investigations into my father’s murder. Appointing him as @ompsrilanka Commissioner proves @GotabayaR’s contempt for victims of atrocities. Heartbreaking for victims of #enforceddisappearances @SP_Eknaligoda & others still seeking answers. https://t.co/nGJEQu6J2f pic.twitter.com/EeNtAQ1iXP
— Ahimsa Wickrematunge (@awickrematunge) May 30, 2021
இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டாம் எனக் கோரி ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் சர்வதேச நன்கொடையாளர்கள் ஆகியோருக்கு நாம் கடிதம் அனுப்புவோம்.
அத்தோடு இந்தப் பிரச்சினைக்குரிய நியமனம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட ஐ.நா அமைப்புக்களுக்கும் மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கும் இரகசிய ஆவணம் ஒன்றினையும் அனுப்புவோம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால குற்றங்களை மூடிமறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் வாகனமாக மாறியுள்ள இந்த அமைப்புக்கு ஐ.நா மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள் தமது வரிப்பணத்தினை பயன்படுத்தி நிதி உதவி செய்யக்கூடாது என வலியுறுத்தி கடிதம் அனுப்புமாறு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட சமூகத்தினரை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே, நீதிபதி உபாலி அபயரட்ண காணாமல் போனோர் அலுவலகத்திற்கு தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டபோது அந்த நியமனம் ஓர் நேரடியான அவமானம் என்றும் வன்முறைச் செயல் என்றும் இலங்கையிலுள்ள பாதிகப்பட்ட குடும்பங்களால் விபரிக்கப்பட்டது.
அரசியல் பழிவாங்கல் எனக் கூறப்படும் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் தலைவராக நீதிபதி அபயரட்ணா இருந்துள்ளார்.
இந்த ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல மனித உரிமை வழக்குகளுக்கான நீதிமன்ற தீர்ப்புக்களை குறுக்கிட்டுத் தடுத்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தினை தலைமைதாங்குவதற்கு அவரை நியமித்தமையானது அந்த அமைப்பின் சுதந்திரத்தினையும் நம்பகத் தன்மையினையும் காத்திரமாகச் செயற்படுவதற்கான வலுவினையும் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது. இலங்கையில் இடைக்கால நீதிக்காக நிறுவப்பட்ட இரண்டு அமைப்புக்களில் ஒன்று இந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்.
இரண்டாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இழப்பீடு வழங்கும் அலுவலகமாகும். (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் வாடுகே பாலித பியசிறி பெர்னான்டோ என்பவரை இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்திற்கு நியமித்து தற்போது அந்த அமைப்பும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்குதலிலும் பெருந்தொகையான நிதி கையாளப்படும். எனினும் இங்கு இடைக்கால நீதிப் பொறிமுறை இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில் இழப்பீட்டு அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர் சர்வதேச சமூகத்தினால் ஆதரவு வழங்கப்பட்ட மற்றும் ஊழல் இடம்பெற்றதாக கண்டுகொள்ளப்பட்ட ஓர் நடவடிக்கையில் முன்னர் பொலிசாரால் விரிவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்.
அவரது ஊழல் குற்றச்சட்டுக்கள் நீதிமன்றச் சட்டத்தினால் பரிசோதிக்கப்பட்டு இன்னும் தீர்க்கப்பட்வில்லை என சூக்கா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணாவின் நெருகடகமானவர்களில் ஒருவரான சந்திர நிமால் வக்சித என்பவர் புதிதாக உருவாக்கப்பட்ட ஊழல் அணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
2009-10 காலப்பகுதியில் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வக்சித தலைமைதாங்கினார் - அந்தப் பிரிவினை திட்டமிட்ட சித்திரவதைக்குப் பொறுப்பான ஓர் பிரிவு என ஐநா குறிப்பிட்டது.
வன்முறைகள் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்களை உள்ளடக்குகின்ற இந்த இடைக்கால நீதிப் பொறிமுறைகளில்இலங்கையிலுள்ள காணாமல்போரின் குடும்பங்கள் பாதுகாப்பாக ஈடுபடமுடியாது.
இந்த அமைப்புக்களின் இருப்பானது சாட்சியாளர்களின் பாதுகாப்புக்கு ஓர் பாரிய ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.