வடமராட்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (09.03.2026) நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றப்படுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
துரத்தி பிடித்த பொலிஸார்
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரைக் கண்டதும், மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் சிறிய ரக வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது, பொலிஸார் அவரை துரத்திச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நெல்லியடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் தற்போது சட்டவிரோதமாக மண் அகழ்வு ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் தினமும் தலா நான்கு தடவைகள் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இத்தகைய சட்டவிரோத மணல் கடத்தலால் சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன எனவும், மணல் கடத்தல் கும்பலுக்கு அஞ்சுவதால் மக்கள் திறந்தவெளியில் கருத்து தெரிவிக்க அச்சப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.