ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய இந்த பேச்சுவார்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதியுடனான இந்த பேச்சுவார்த்தையில் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மேற்கொள்ளப்படும் அவமதிப்புகள் குறித்து சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரக்ள கடந்த தினங்களில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர். இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தெரியவருகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுடன் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை அடிப்படையாக கொண்ட விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தில் இருந்து விலகும் எந்த தேவையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனவும் அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வரும் பொது தமது கட்சிக்கு இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டிருந்தார்.