இந்த கொள்ளையர்களை விரட்ட வேண்டும்! தேரர் தெரிவிக்கும் விடயம் (Video)
யுத்தத்தை கொண்டாட விகாரைகளை அமைக்க வேண்டுமா? யுத்தத்திற்கும் தர்மத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. யுத்தம் என்பது மனித கொலை. வாழ்க்கையயை அனுபவித்து நிம்மதியாக வாழவேண்டிய தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என அனைவரும் அநியாயமாக யுத்தத்தில் கொல்லப்பட்டனர் என அஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருடமாக இது எமது நாட்டில் இடம்பெற்றது. தமிழ் சமூகத்திற்கு சிங்கள சமூகத்திற்கு முஸ்லிம் சமூகத்திற்கு முழு இலங்கை சமூகத்திற்கும் 30 வருட காலமாக காணப்பட்ட பாரிய பிரச்சினை தான் யுத்தம்.
உண்மையாக சொல்லப்போனால் எம்முடைய சிறுபராயத்தில் இந்த சிங்கள தமிழ் பிரிவினைகள் இருக்கவில்லை. 12,15 வயதில் தான் எமது தலைகளிலும் இதனை திணித்தார்கள். எனக்கு நன்றாக நினைவுள்ளது. நாம் அந்த காலகட்டத்தில் தமிழ் வைத்தியரிடமே வைத்தியத்திற்கு சென்றோம்.
எங்களுடைய வீட்டின் அடித்தளத்தை அமைத்தவர் தமிழ் தச்சுதொழிலாளி ஒருவர். தீபாவளி தினத்தன்று அந்த தச்சு தொழிலாளியின் வீட்டார் எம்முடைய வீட்டிற்கு உணவு வகைகளை கொண்டு வருவார்கள். எம்முடைய பண்டிகைகளில் நான் எனது அம்மாவோடு அவர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளேன்.
இப்படித்தான் அந்த காலத்தில் தமிழ் சிங்கள உறவு எம் காலத்தில் காணப்பட்டது. எமக்கு இந்த பிரிவினைகள் தெரியாது. அவர்களிடம் இருந்தும் எம்மிடம் இருந்தும் அன்பு மாத்திரமே எமக்கு தென்பட்டது.
அந்த ஒற்றுமையை உடைக்க தான் தமிழ் சின்கள பாகுபாடே கொண்டுவந்தார்கள். அரசியல் நோக்கத்திற்காகவே இந்த பிரச்சினையை எம் மத்தியில் கொண்டுவந்தார்கள்.
அரசியல் பலத்தை தக்கவைத்துக்கொள்ளவே இதை செய்தர்கள். எமது நாட்டு மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 83களில் ஜே.ஆர் ஜயவர்தன மிகவும் மோசமான முறையில் இவற்றை கையாண்டார். தமிழ் மக்களை கொலை செய்தார்கள். கடைகளை தீவைத்து எரித்தார்கள்.
இருப்பவற்றை கொள்ளையடித்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு வைராக்கியத்தை உருவாக்கினார்கள். இன்று காஸ் வரிசையில் அனைத்து மக்களும் நிற்கின்றனர். அனைத்து தாய் மாறும் பால்மாவிற்கான வரிசையில் நிற்கின்றார்கள்.
எரிபொருள் வரிசையில் நிற்கின்றார்கள். இன்று அனைத்திற்கும் வரிசை காணப்படுகின்றது. அரசியல்வாதிகள் விளையாடும் அரசியல் விளையாட்டிற்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
மக்களின் சடலங்களின் மேல் அரசியல் பலத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்ச்சிக்கும் அரசியல் நிறுத்தப்படவேண்டும். தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த கொள்ளையர்களை விரட்டிவிட்டு ஒரு தூய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.