மலையகப் பகுதிகளில் மண்சரிவுகளால் வீடுகளை இழந்த தோட்டத் தொழிலாளர்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..
மலையகப் பகுதிகளில் மண்சரிவுகளால் வீடுகளை இழந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக மாற்று இடங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாடசாலைகள் மற்றும் கலாசார நிலையங்களில் தங்கியிருக்கின்றனர்.
உடனடியாக மாற்று இடங்கள்
தோட்ட நிர்வாகங்கள் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அந்த அறிக்கை வருவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாமதத்தைத் தவிர்க்க செந்தில் தொண்டமான் இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் பணிப்பாளருடன் சந்திப்பு நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் முடிவில், 22 தோட்டக் கம்பனிகளும் குறித்த அறிக்கைக்காகக் காத்திருக்காமல், உடனடியாக மாற்று இடங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் சம்மேளனம் மூலமாக எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டதும், பொது நன்கொடையாளர்களின் உதவியுடன் தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டு, தொழிலாளர்கள் விரைவில் அங்குச் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.