நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் தளர்த்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு - மக்களின் செயற்பாடுகளால் அதிருப்தி
கடந்த 21ம் திகதி அமுல்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான பயணத்தடையானது அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்காக இன்றைய தினம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய எதிர்வரும் 31 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணம்
இந்த நிலையில், இன்று காலை யாழ்.சங்கானை நகர்ப்பகுதியில் உள்ள கடைகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்துள்ளனர்.
இதனால் அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதையடுத்து மக்கள் வரிசையில் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.
அத்துடன் இன்று அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் வர்த்தக நிலையங்களே திறக்கப்படும் என அரசாங்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், சங்கானை நகர்ப்பகுதியில் உள்ள ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருந்ததையும் அவதானிக்க முடிந்துள்ளது.
யாழ்ப்பாணம் - கஜி
மன்னார்
மன்னார் நகர்ப் பகுதிகளிலும் மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களிற்கும் வருகை தந்தனர்.
மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடமாடுவதற்கு பொலிஸாரும், இராணுவமும் அனுமதி வழங்கி உள்ளனர்.
மேலும், வீதிகளில் கூட்டம் கூட்டமாக நடமாடுபவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை.மக்கள் தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களைத் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளர்கள்,பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறுமீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த பயணத்தடை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில், இவர்கள் பொருளாதாரரீதியில் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களும் நிவாரணம் வழங்க அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் - ஆசிக்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வெளியில் சென்றதன் காரணத்தினால் பொலிஸாரினால் மட்டக்களப்பு மாவட்ட கல்லடி பாலமானது முடக்கப்பட்டது.
இதன்போது அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு மட்டக்களப்பு மாநகருக்குள் வருகைதந்தோர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர். இதன் காரணமாகக் கல்லடி பாலத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பழைய பாலம் ஊடாக தேவையற்ற வகையில் பிரயாணம் செய்தோர் திருப்பியனுப்பப்பட்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடானது பொதுமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, உணவு, மரக்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினம் தளர்த்தப்பட்டது.
ஆனாலும் பொதுமக்கள் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு வெளியில் சென்றதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவ்வாறு வெளிச்செல்பவர்கள் நடை தூரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரமே செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி மட்டக்களப்பில் மக்கள் செயற்பட்டமையானது எதிர்காலத்தில் கோவிட் அச்சுறுத்தல் பாரிய தாக்கத்தினை செலுத்தும் எனச் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் நின்று வீதிகளில் தேவையின்றி வரும் மக்களைச் சோதனை செய்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதாக இருந்தால் தூர இடங்களுக்குச் செல்லாமல் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு பொலிஸாரினால் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் தங்களது சேவைகளைப் பெறும் நபர்கள் சமூக
இடைவெளியைப் பேணி சுகாதார விதிமுறைகளின் படி தங்களது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும்
வகையில் பாதுகாப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிந்துள்ளது.
மட்டக்களப்பு - குமார் , நடேசன்
வவுனியா
பயணத்தடை சில கட்டுப்பாடுகளுடன் தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் வீதிகளில் அத்தியாவசிய தேவையின்றி பிரயாணங்களை மேற்கொண்டவர்கள் வவுனியா பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் அத்தியாவசிய தேவையின்றி நகரை நோக்கி அதிகளவிலான மக்கள் வந்தமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார், அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களை எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினர்.
வவுனியா - திலீபன்,தீசன்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
குறைந்தளவிலானோர் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதோடு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் உரிய அனுமதிகளோடும்,கட்டுப்பாடுகளோடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாத வியாபாரிகளுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொது மக்கள் முகக்கவசங்களை சரியாக அணிந்து சம இடைவெளிகளைப் பேணி சுகாதார
நடைமுறைகளைப் பேணுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
தேவையற்ற வாகன பிரயாணங்களை பொலிஸார் சோதித்து திருப்பியனுப்பினார்கள்.
திருகோணமலை - முபாரக்
மலையகம்
ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் மக்கள் இன்று காலை முதல் பொருட் கொள்வனவில் ஈடுபடத்தை காணக்கூடியதாக இருந்தது.
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்து வந்தனர்.
நகரங்களுக்கு வரும் மக்களும், வாகனங்களும் பொலிஸாரால் கடுமையாகப்
பரிசோதிக்கப்பட்டதுடன் அநாவசியமாக ஹட்டன் மற்றும் தலவாக்கலை உள்ளிட்ட
நகரங்களுக்குள் நுழைந்த வாகனங்கள் கடுமையாகப் பரிசோதிக்கப்பட்டு
திருப்பியனுப்பட்டன.
மலையகம் - திருமால்










