நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் (Video)
நாடளாவிய ரீதியில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா - இராகலை பகுதியில் பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி சமூக அபிவிருத்தி ஸ்தாபனம், ராகலை நகர் பெண் சிவில் அமைப்புகள் மற்றும் பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் இணைந்து இன்று (12.03.2023) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில்சார் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வீட்டுப் பணிப்பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் காத்திரமான நடவடிக்கைகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
இதற்கமைய கிளிநொச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டாபிந்து கூட்டமைப்பு எனும் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (12.03.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் பெண்களிற்கான உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்டவற்றை பாதுகாத்து தருமாறு கோரி பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேசத்திலிருந்து பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: எரிமலை
தலவாக்கலை
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் போது எமது நாட்டில் மலையக பெண்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மலையகப் பெண் தொழிலாழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்தேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு , சிறுவர் துஷ்பிரயோகம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப வன்முறை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஊர்வலம் தலவாக்கலை நகரில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஊர்வலம் தலவாக்கலை கதிரேசன் கோயிலுக்கு அருகாமையில் ஆரம்பித்து
தலவாக்கலை பேருந்து தரிப்பு நிலையம் வரை சென்றது.
'பெண்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடு, பெண்கள் அடிமைகளா, பெண்களை வெளிநாட்டுக்கு வியாபாரம் செய்யாதே,' போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தி மக்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
