நாடளாவிய ரீதியில் சுகாதாரத்துறை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களுடன் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
குறித்த போராட்டம் இன்று (16.01.2024) காலை 6.30 மணி மணியிலிருந்து நாளை (17.01.2024) காலை 6.30 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குநர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் காலை 6.30 மணி மணியிலிருந்து நாளை (17.01.2024) காலை 6.30 மணி வரை வேலை நிறுத்த போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி : ஷான்
மன்னார்
பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சேவையை தவிர ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி : ஆஷிக்
வவுனியா
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு , நோயாளர் விடுதி , விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட அளவில் சிற்றூழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி : திலீபன்
புத்தளம்
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிளினிக் நோயாளர் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு ஆகியன மூடிய நிலையில் காட்சியளிக்கின்றன.
செய்தி : அஷார்
நுவரெலியா
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி சுகாதார தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



