தொடருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டத்தின் முதல் கட்டம் ஆரம்பம்!
100 தொடருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டத்தின் முதல் கட்டமான ‘Dream Destination’,ஐ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே தொடருந்து நிலையத்தில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய திட்டம்
இலங்கையின் தொடருந்து நிலையங்களை உலகத் தரத்துடன் ஒப்பிடத்தக்க வகையில் புதிய அடையாளத்துடன் மேம்படுத்துவதற்காக, அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, 'க்ளீன் ஶ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்து, தனியார் துறையின் ஆதரவுடன் 100 தொடருந்து நிலையங்களை நவீனமயமாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
பொது போக்குவரத்தை உயர்தர சேவையாக மாற்றுவதற்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் கைவிடாது என்றும், அதை தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
மேலும், பொது போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையை ஒரு பணியிடமாக மாற்றி, விரைவான வளர்ச்சியை அடைய இத்திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri