தேசிய மட்ட துடுப்பாட்ட அணிக்குள் உள்வாங்கப்பட்ட மாணவிக்கு இராணுவத்தினரால் புதிய வீடு
தேசிய மட்ட துடுப்பாட்ட அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ். சுழிபுரம் மாணவிக்கு இராணுவத்தினரால் புதிய வீடொன்று புனரமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல் நேற்று யாழ்ப்பாணத்தில் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய துடுப்பாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். சுழிபுரம் கிழக்கு பறாளய் பகுதியை சேர்ந்த மாணவியான செல்வராசா கிறிஸ்ரிகாவின் குடும்ப நிலையினை கருத்திற்கொண்டு இலங்கை இராணுவத்தின் 513 ஆவது படைப்பிரிவு 16 ஆவது கெமுனு படையணி என்பவற்றின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
16 ஆவது கெமுனு படையணியின் மனிதவள உதவி
இதன்போது பிரதம விருந்தினராக 51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எ.எ.உதயகுமார கலந்து சிறப்பித்துள்ளார்.
இதற்கான மனித வள உதவியினை 16 வது கெமுனு படையணி வழங்குகின்றது. இந்நிகழ்வில் அரச அதிகாரிகளும், பொதுமக்களும், இராணுவத்தினரும் கலந்துகொண்டனர்.
இந்த வீடு அமைப்பதற்கான நிதி அனுசரணையினை தியாகி அறக்கட்டளை வழங்குகின்றது. வீட்டிற்கான காணியும் இராணுவத்தினராலேயே வழங்கப்பட்டுள்ளது.