தேசிய பேரவை தொடர்பான பிரதமரின் அழைப்பை நிராகரித்த விக்னேஸ்வரன்
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய பேரவை அமைப்பதற்கு பங்கெடுக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது பிரதமர் முன்வைத்த யோசனையை நிராகரித்துள்ளார்.
அழைப்பு நிராகரிப்பு
இதன்போது கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன், “நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் தமது தேவைப்பாடுகள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்திலே விளக்கி கூறுகிறார்கள்.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திலே அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறோம் எழுத்து மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புகிறோம் ஆனால் பிரச்சினைகள் தீர்வதாக இல்லை.
தேசிய பேரவை உருவாக்கம்
இவ்வாறான நிலையில் தேசிய பேரவை என ஒன்றை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதாக நான் எண்ணவில்லை.
அவ்வாறாயின் மாகாண ரீதியில் பேரவையை உருவாக்கங்கள் வடக்கில் எங்கள்
பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளை முன்வைக்கிறோம். மத்தியில் இருந்து ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வருகை
தந்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கட்டும்.” என தெரிவித்துள்ளார்.