யாழில் குப்பை போடுவதை தடுக்க நடராஜர் சிலை
யாழ்., நல்லூர் - பாணாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
எனினும், அவ்வாறு சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை போடுவது நிறுத்தப்படவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் பாணாங்குளம் அமைந்துள்ளது. குறித்த பகுதியில் தொண்டு நிறுவனங்களும், மக்கள் குடியிருப்புகளும் உள்ளன.
அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர் என்று அதிகாரிகளிடம் முறையிட்டும் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை.
அதனால் குப்பைகள் வீசப்படும் இடத்தில் நடராஜப் பெருமானின் சிலை ஒன்றை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடவுளுக்கு ,அதிப்பளித்து மக்கள் குப்பைகளைப் போடாது விடுவார்கள் என எண்ணி இந் நடவடிக்கை எடுக்கப்பட்டது
ஆனாலும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் தொடர்ந்தும் குப்பைகள் வீசப்படுகின்றன என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.