நாட்டை உலுக்கிய சட்டத்தரணியின் படுகொலை! அரச ஊழியருக்கும் ஆபத்து - நாமலின் தகவல்
நாட்டில் தற்போது சட்டத்தரணி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணிகள் மாத்திரமன்றி வைத்தியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கும், அரசாங்க உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று(16.02.2026) கொழும்பு உயர் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்
நாட்டில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு சூழல் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து நாமல் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, சட்டத்தரணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டின் சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளுடன் தொடர்புபடுத்தி உண்மையை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
நாட்டு மக்களை திசைத்திருப்பும் அநுர அரசு
சட்டத்தரணிகள் மட்டுமன்றி, வைத்தியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கும் அரசாங்கத் தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், இது கடந்த காலப் போராட்டங்களில் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதைப் போன்ற அபாயகரமான போக்காகும் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே சமயம், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ அல்லது முதலீடுகளை ஈர்க்கவோ முடியாத அரசாங்கம், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மூலம் மக்களின் கவனத்தை வேறு திசைகளுக்கு திருப்ப முயல்கிறது.
மேலும், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நீண்ட காலம் கடந்தும், இன்னும் முந்தைய அரசாங்கங்களையே குற்றம் சாட்டி வருவது வருத்தத்திற்குரியது விடயமாக பார்க்கப்படுகிறது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.