பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமல்ல; அரசாங்கம் அரசியல் நாடகம் ஆடுகிறது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, தாம் சிறையில் சந்தித்தமை இரகசியமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் சந்திக்கச் சென்றமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது ஒரு 'அரசியல் ஊடக நாடகம்' என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அல்ல எனவும், தற்போதைய அரசாங்கம் இவ்வாறான ஊடக நாடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்து உள்நோக்கத்துடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்த பின்னர், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விசேட பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2018/19 காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையிலிருந்தபோது, நான் அவரைச் சந்திக்கச் சென்றது ஒரு இரகசியமான விடயமல்ல. உண்மையில், நான் அங்கு சென்றமைக்கான சிறைச்சாலை பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
அக்காலக்கட்டத்தில், அவர் 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு எமது கூட்டணியின் பங்காளியாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அறியக்கிடைத்துள்ள தகவல்களின்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பிரான்ஸ் வரை சென்றுள்ளது. இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.
தாம் பிள்ளையானைச் சந்தித்ததை உறுதிப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் இவ்வளவு தூரம் பயணித்தார்கள் என்றால், அது அப்பட்டமான பொதுப்பண விரயம் என தெரிவித்துள்ளார்.
எனக்குத் தெரிந்தவரை, பிள்ளையான் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அல்ல. அப்படியாயின், அரசாங்கம் இவ்வாறான ஊடக நாடகங்களை நடத்தி யாரை திருப்திப்படுத்த முயல்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியும் (NPP) பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல கதைகளை சமூகமயமாக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் தற்போது இந்தத் துயரத்தை அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதற்காகப் பயன்படுத்த முயலுமானால், அது இன்னமும் உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும் என தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகங்கொடுக்க நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அத்துடன், நிலவும் சந்தேகங்களைத் வெளிப்படைத்தன்மையுடன் தீர்த்துக்கொள்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் செய்ய வேண்டியது, அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நாட்டு மக்களுக்கு அர்த்தமுள்ள பலன்களைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam