என் கார் - என் பெட்ரோல் எனக் கூறி விதிகளை மீற முடியாது : அமைச்சர் பிமல் எச்சரிக்கை
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களும் எரிபொருளும் தங்களது தனிப்பட்ட சொத்து என்று கூறி, வீதிப் பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிக்க முடியாது என்றும், பொதுவான வீதிகளைப் பயன்படுத்தும்போது அனைத்து வாகன சாரதிகளும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தனிநபர்கள் தங்கள் சொந்த வளாகத்திற்குள் தங்களது வாகனங்கள் குறித்துத் தாங்களே முடிவெடுக்க சுதந்திரம் பெற்றிருந்தாலும், மற்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய வீதிகளுக்கு அத்தகைய சுதந்திரம் பொருந்தாது என்று கூறியுள்ளார்.
இயந்திர ரீதியாகத் தகுதியான நிலையில்
“உங்கள் சொந்த வளாகத்திற்குள் ‘என் கார், என் பெட்ரோல்’ என்று நீங்கள் கூறலாம், ஆனால் அந்த மனப்பான்மையைப் பொது மக்கள் பயன்படுத்தும் வதகளுக்குக் கொண்டு வர முடியாது. சட்டம் அனைவருக்கும் பொருந்தும்,” என்று ரத்நாயக்க கூறினார்.

வீதி விபத்துக்களால், அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், அதைத் தாண்டியும் பின்விளைவுகள் ஏற்படுவதாகவும், அதனால் மருத்துவப் பணியாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற பொது அதிகாரிகள் பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
வீதி விபத்துக்களைத் தனித்தனிச் சம்பவங்களாகக் கருதாமல், அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய அவற்றை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
அமைச்சரால் கோடிட்டுக் காட்டப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, 5,000 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வீதிப் பாதுகாப்பு தகுதி ஆய்வுகளுக்கு உட்பட்டு சான்றிதழ் பெற வேண்டும்.
பயணிகள் போக்குவரத்திற்கு வாகனங்கள் இயந்திர ரீதியாகத் தகுதியான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இந்த ஆய்வுகள் தேவைப்படும் என்று ரத்நாயக்க தெரிவித்தார்.