லண்டனுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல அரசியல்வாதியின் மகனுக்கு நீதிமன்றின் உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஆளுநரும் கொழும்பின் மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகனான மொஹமட் இஷாம் ஜமால்தீன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற விமானத்தில் லண்டன் செல்வதற்காக நேற்று பிற்பகல் 1.45 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த ஜமால்தீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடி
47 வயதுடைய ஜமால்தீன், கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத் தடை பெற்றுள்ளார்.

இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பிற்பகல் 4.30 மணியளவில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மல்பெரி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் என தம்மைக் காட்டிக்கொண்டு, 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.