பாரதூரமான நிலையில் பசில் வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆனந்த தேரர்
நாடு பாரதூரமான நிலைமையை எதிர்நோக்கி வரும் நிலையில் பசில் ராஜபக்ச எந்த காரணத்தின் அடிப்படையில் நாட்டில் இருந்து வெளியேறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில அவர் மேலும் கூறுகையில்,
தனிப்பட்ட காரணங்களுக்காக பசில் ராஜபக்ச அமெரிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதற்கு அழுத்தங்களை கொடுக்க முடியாது.
எனினும் நாட்டில் உள்ள நிலைமையில் அவர் இப்படி செய்திருக்கக் கூடாது. குறிப்பாக ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த வகையிலும் அவர் பொறுப்பில் இருந்து விடுப்பட உரிமையில்லை.
இதனை பொறுப்பை தட்டிகழித்தலாக கருத முடியும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன போன்ற அரசியல்வாதிகள், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் வரை தாம் போட்டுக்கொள்வதில்லை என கூறியுள்ளனர்.
இது சிறந்த தீர்மானம். பசில் ராஜபக்சவும் தனக்கு முன்னர் நாட்டை பற்றி சிந்தித்து இருக்க வேண்டும் இதற்கு முன்னரும் இவ்வாறான முக்கியமான தருணத்தில் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு சென்றார்.
அவர் அமெரிக்காவில் இருந்தவாறு நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆராய்ந்து வந்தால் அது சிறந்தது எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.