படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நேற்றைய தினம் (18.02.2023) அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணவான், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இ.பிரசன்னா, மற்றும் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்
இதன்போது, ஜனாதிபதிக்கு வழங்கி வைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு - கிழக்கில் ஊடக சுதந்திரத்தைப் பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேள, கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் நாம் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இல்லையெனத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊடக அமைப்புக்கள்
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புக்கள், தொடர்ச்சியாகக் கண்டித்தே வந்துள்ளது.
2000ஆம் ஆண்டில் பி.பி.சி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்கேறிய ஊடகப் படுகொலைகள் நீண்டே சென்றிருந்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள், கைதுசெய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை என்பது அனைவரும் அறிந்ததொரு உண்மையாகும்.
வடக்கு - கிழக்கில் ஊடக சுதந்திரத்தைப் பேண நாம் தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை, கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டுமென மீண்டும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
சர்வதேச தலையீடு
அதேவேளை, நல்லாட்சி காலத்தில் தாங்கள் பிரதமராக இருந்த நிலப்பகுதியினில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடு ஒன்றை வழங்க முன்வந்து விசாரணைக் குழுவொன்றையும் அமைத்திருந்தீர்கள்.
குழுவும் விசாரணைகளை முன்னெடுத்த போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னராக அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. பின்னராகக் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லையென வாதிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போது தாங்கள் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்குழு பரிந்துரைகளின் பிரகாரம் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதில் கவனத்தைச் செலுத்தக் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டா செல்வா ஒப்பந்தம்: ஜனா கருத்து
பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இந்த நாடு இந்த அளவிற்கு உயிர்ச் சேதங்களைக் கண்டிருக்காது ஊடகவியலாளர்கள்கூட மரணித்திருக்க மாட்டார்கள். எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
மேலும், 1956 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கா, தந்த செல்வநாயகத்துடன் பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஏற்படுத்திய போதும், அப்போது புத்த பிக்குகள் கொழும்பிலிருந்து கண்டிக்கு ஜே.ஆர் அவர்களது தலைமையிலே ஒரு ஊர்வலத்தை நடாத்தியிருந்தார்கள். இதனால் அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் சென்றிருந்தது.
அந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இந்த நாடு இந்த அளவிற்கு உயிர்ச் சேதங்களைக் கண்டிருக்காது ஊடகவியலாளர்கள்கூட மரணித்திருக்கமாட்டார்கள். இந்நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்குப் புத்த பிக்குகள் எதிராக இருப்பது இந்த அழிந்த நாட்டை மீண்டும் மீண்டும் அழிப்பதற்கான எடுகோளாகவுள்ளது.
எனவே,
அவ்வப்போது ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கும், காணாமல் ஆக்கப்பட்டதற்குமாக
நீதி வேண்டிப் போராடுகின்றோம், எனவே அதற்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு
அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.











ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
