முரசுமோட்டை தாக்குதல் சம்பவம் - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை
கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேகநபர்களை கடும் நிபந்தனைகளுடன் தலா இரண்டு லட்சம் பெறுமதியான சரீரப்பிணைகளில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
முரசுமோட்டை பகுதியில் கடந்த 13ஆம் திகதி இரவு கடைக்குப் பொருட்களை வாங்கச்சென்ற இரண்டு சகோதரர்கள் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைக் கேட்பதற்குச் சென்ற அவர்களது தாயார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டதாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நான்கு சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நான்கு பேரும் கடும் நிபந்தனைகளுடன் தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வழக்கு தவணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி காலை வயல் காணி ஒன்றில் ஏற்பட்ட
தகராறின் தொடர்ச்சியாகவே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.