மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரிடம் பொலிஸார் விசாரணை
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனிடம் (T. Saravanapavan) பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும் கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 186 பேரின் நினைவாக சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் தான் அஞ்சலி செலுத்தியதாகவும், சிறு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 186 பேரின் நினைவாகவே இந்த நினைவுத்தூபியுள்ளதாகவும், அதனால் வருடாந்தம் அதில் அஞ்சலி செய்வதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தாக கூறியுள்ளார்.
குறித்த படுகொலை தொடர்பில் யார் கொலையாளிகள் என்று சாட்சியங்கள் கூட பதிவு செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்காத பொலிஸார் குறித்த நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியமைக்காக விசாரணை செய்வதாகவும் தெரிவித்த முதல்வர் இது தொடர்பான தனது அதிர்ப்தியை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்



