மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13ம் ஆண்டு நினைவு பேரணி (PHOTOS)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13ம் ஆண்டு நினைவு பேரணி நிகழ்வானது இன்று மன்னாரில் அனுஸ்டிக்கபட்டுள்ளது.
இந்நிகழ்வு மன்னார் மறைமாவட்ட கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளாரின் ஏற்பாட்டில் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவும்,மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மடுமாதாவின் வரவேற்பு திருச்சுரூப வளாகத்திலிருந்து செபமாலை பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இதன் தொடக்கத்தில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் அவர்களினால், நிகழ்வு நோக்கு தொடர்பாக கூறி அனைத்து மக்களையும் வரவேற்றதினை தொடர்ந்து, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறீஸ்து நாயகம் அடிகளாரின் ஆரம்ப அஞ்சலி உரை இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கறிற்ராஸ்-வாழ்வுதய பணியாளர்களின் தலைமையில் அனைத்து மக்களும் பவனியாக நகர சுற்று வட்டம் ஊடாக புனித செபஸ்தியார் பேராலயத்தினை சென்றடைந்து,அங்கு புனித செபஸ்தியார் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி அகஸ்ரீன் புஸ்பராஜா அடிகளாரின் ஏற்பாடு செய்யப்பட்ட செபவழிபாடு நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது.
இதில் போரினால் இறந்த அனைத்து ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக பங்குபற்றிய அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அனுஸ்டிப்பு நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து தமது இதய அஞ்சலியினை தெரிவித்து இறைவேண்டலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.