தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!
திருகோணமலை
திருகோணமலை- தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் கோயில் சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி இன்று (17) காலை கொட்டும் கனமழையிலும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வானது இலங்கை தமிழரசு கட்சியின் தம்பலகாமம் பிரதேச சபைக்கு உறுப்பினர்களாக தெரிவாகியவர்களின் ஏற்பாட்டிலும் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வலையொலியாக மாறியுள்ளன.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில், காணாமற்போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றி பேசினர்.நிகழ்வு, சமூக நினைவாற்றலை பாதுகாத்து, இனநீக்கம், உயிரிழப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எதிர்வினையாகவும் அமைந்தது.
இதன் போது கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் பயணிப்போரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பருகினர். இதில் பெரும்பாலனோர்கள் கொட்டும் கனமழையிலும் கலந்து கொண்டிருந்தனர்.
திருகோணமலை தம்பலகமம் நாயன்மார் திடல், கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி இன்று (17) மாலை வழங்கி வைக்கப்பட்டன.
இதனை தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தம்பலகாமம் பிரதேச இணைப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.
இதில் குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.
திருகோணமலை- சிவன்கோயிலடி
திருகோணமலை சிவன்கோயிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி இன்று (17) மாலை வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகள் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் நவாலியில் அமைந்துள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கொட்டும் மழைக்கும் மத்தியிலும் ஈகைச் சுடர் ஏற்றி, மலர்தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இணைத்து கொண்டனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று தமிழரசுக்கட்சியின் அராலித் தொகுதிக்கிளையில் இடம்பெற்றது.
இரத்ததான முகாம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது.
மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.
இராமநாதபுரம்
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் தமிழரசுக்கட்சியின் இராமநாதபுரம் வட்டாரத்தின் ஏற்பாட்டில் பொதுச்சந்தை முன்பாகவும், ஆறுமுகம் வீதி சந்தியிலும் இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டார்.
இதன்போது, அவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் ஈழத்தமிழ் தேசிய இனம் இந்த மண்ணிலே நீண்டகாலம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டோம். 1954 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழர் மீதான பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றன.
நாட்டின் பல பகுதிகளில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட போது எல்லாம் தர்மத்தின் வழி நாங்கள் ஒரு தீர்வை எட்டிக்கொள்ளலாம் என எமது தலைவர்கள் கருதிய காலத்தில் எங்களைப் பாதுகாக்க ஆயுதங்களுக்கு பதில் வேறொன்றும் இல்லாத நிலையிலே ஆயுதங்களை ஏந்தினோம்.
அதனை விட கொத்தணி குண்டுகளால் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை நடந்து 16வருடம் ஆகியிருந்தாலும் சிரட்டையில் கஞ்சி என்பது உணவுக்காக மக்கள் கஷ்டப்பட்ட காலத்தில் பெரிதும் உதவியது.
அந்த கஞ்சி குடித்த சிறுவர்களையே கொன்றது. இலங்கை அரசு சிரட்டை கஞ்சி என்பது எங்களோடு வாழ்ந்தவர்களின் ஆத்மாவாக நினைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளி
தமிழரசு கட்சியின் பச்சிலைப்பள்ளி கிளை ஏற்பாட்டில் பளை பேருந்து தரிப்பிடத்தில் ஈழப் போராட்டத்தில் இறுதி நாட்களில் இனவழிப்பு செய்யப்பட்ட உறவுகள் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்ப்பட்டது.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி
தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.
இதேவேளை, கிளிநொச்சி பூனகரி பிரதேசத்திற்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இன்று (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதேச மக்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்த மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சந்திக்குச் சந்தி அனுஸ்டிக்கப்பட்டது.
இராணமடுச் சந்தி முதல் பரந்தன் வரையான A9 வீதியில் உள்ள பல பகுதிகளில் நினைவு கூரப்பட்டது.
கிளிநொச்சி புதுமுறிப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இன்று (17) பகல் 2 மணிக்கு புமுறிப்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதேச மக்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்த மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இறுதி யுத்தத்தில் உணவுக்காக போராடிய மக்களிற்கு வழங்கப்பட்ட பச்சை அரிசிக் கஞ்சியை நினைவுப்படுத்தும் வகையில் கஞ்சிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
A9 வீதி எங்கும் கஞ்சிக் கூடாரங்களாக காட்சியளித்தன. வீதியால் பிரயாணிக்கும் மக்கள் நிறுத்தி நினைவு கூரலில் கலந்து கொண்டனர்.
அம்பன் கிழக்கு பகுதி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு பகுதியில் கிராம மக்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வானது இன்று காலை அம்பன் கிழக்கு சந்தியில் நடைபெற்றுள்ளது.
இதில் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இளைஞர்களினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது இன்று (17) வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு தாண்டியடியில் தமிழரசு கட்சியின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று ( 27) இடம் பெற்றது.
தாண்டியடி சந்தி, ஸ்ரீ முருகன் ஆலயத்தின் முன்பாக முள்ளிவாய்கால் படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு இந்த கஞ்சி பரிமாறப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச தமிழரசு கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள், முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்த தமிழின உறவுகளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணி
இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மல்லாகம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆண்டு நினைவையொட்டி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபன், தமிழ் மக்கள் கூட்டணியின் வலி. வடக்கு தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
