இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் புகைப்படத்தை முல்லேரியா பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் தலை மற்றும் கைகால்களை காணவில்லை என்பதால் சடலத்தின் பிரேத பரிசோதனை இன்னும் சில நாட்களுக்கு தாமதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
51 வயதான பிரதீபா என்ற பெண் கடந்த 27 ஆம் திகதி காலை முதல் காணவில்லை என அவரது மகள் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பொலிஸ் விசாரணை
இதற்கமைய முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழு ஒன்று சிசிரீவி கமெராவை பரிசோதித்த போது, குறித்த பெண் அங்கொடையில் இருந்து கடுவெலைக்கு நீல நிற முச்சக்கரவண்டியில் சென்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடுவெல நகரில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாரதி ஒருவருடன் அவர் வருவது சிசிரீவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அதன் பின் குறித்த பெண் உணவை வாங்கிக் கொண்டு சுமார் 10 நிமிடம் உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
KI 3030 என்ற சாம்பல் நிற காரில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். மேலும் குறித்த பெண் அன்றிலிருந்தே காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த கார் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது, அது சியம்பலாப்பே பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு பயண தடை
அவரது சியாம்பலாப்பே பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ஒரு அறைக்குள் நீண்ட முடி மற்றும் இரத்தக் கறைகள், வீட்டின் வெளியே பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டன.
இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

இது தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த சடலம் நீண்டகாலமாக காணாமல் போயிருந்த 51 வயதுடைய பிரதீபாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 55 வயதான பிரதான சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் சடலத்தில் தலை மற்றும் கைகால்கள் இல்லாமையால் சடலத்தின் பிரேத பரிசோதனை இன்னும் சில நாட்களுக்கு தாமதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், குறித்த நபரை கைது செய்ய பல விசாரணை குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam