முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு கிடைக்கப் பெற்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் படி மாவட்டத்தில் 17 புதிய கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவர் கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் முள்ளியவளை, மாமூலைப்பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மூன்று பேரும், வெலிஓயா பிரதேசத்தில் ஒருவரும், மாங்குளம் பிரதேசத்தில் இருவரும், ஜயன்கன்குளம் பிரதேசத்தில் இருவரும், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு பேரும் என மாவட்டத்தில் மொத்தமாக 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் சுகாதார விதிமுறைகளை உரியவாறு பின்பற்றி கோவிட் தொற்று பரவுவதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை (17) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 358 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம் மாதம் 2 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 22 நபர்கள் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) மன்னார் மாவட்டத்தில் புதிதாக 30 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 13 தொற்றாளர்கள் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,6 தொற்றாளர்கள் மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், 4 தொற்றாளர்கள் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான மற்றும் முதல் தொடர்பாளர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் 3 தொற்றாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையிலும் முருங்கன்,பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் நானாட்டான் ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒரு தொற்றாளர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இக் காலப்பகுதியில் தொற்று அதிகரிக்க காரணமாக காலநிலை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் கடைபிடிப்பதில் ஏற்பட்டுள்ள தளர்வு நிலை ஆகிய காரணங்களால் தற்போது தொற்று அதிகரித்துள்ளது எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
அவ் மேலும் தெரிவித்ததாவது,
மன்னார் மாவட்டத்தில் உள்ள 11 வைத்தியசாலைகள் மற்றும் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் நாளாந்தம் எழுமாறான மற்றும் நோய் தொற்று உள்ளவர்களுக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், நறுவிலிக்குளம் ஆயுர்வேத வைத்தியசாலையிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசியை 90 சத வீதமானவர்களும், 2 ஆவது தடுப்பூசியை 73 சதவீதமானவர்களும் பெற்றுக் கொண்டுள்ளனர். பாடசாலை மாணவர்களில் 5599 பேர் இதுவரை தமது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
பாடசாலைக்கு செல்லாத ஆனால் பாடசாலை செல்லும் வயதுடையவர்களுக்கான தடுப்பூசி 1144 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், 3 ஆவது தடுப்பூசியை முன் கள பணியாளர்கள் 595 நபர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த வருடம் மொத்தமாக 33 டெங்கு நோயாளர்களும், நவம்பர் மாதத்தில் 6 டெங்கு தொற்றாளர்களும் மன்னார் நகர பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றமையால் அதிக அளவான வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கி காணப்படுகின்றமையினால் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஆகவே மக்கள் நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதோடு, நுளம்பு கடிக்கும் நேரங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் , காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் சுய சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.
பிராந்திய செய்தியாளர் - ஆஷிக்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
