இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞன்.. இறுதி அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்பி
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார்.
குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, "இலங்கையிலே மக்களுக்கு பாதுகாப்பு உண்டு.
இலங்கை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று கூறுகின்ற இந்த அரசாங்கத்திற்கு மத்தியில் ஒரு தமிழ் உயிர் மிக மோசமாக முறையில் அடித்து படுகொலை செய்யப்படுள்ளார்.
இன அழிப்பு நடவடிக்கை
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு வடிவமாக தொடர்ந்தும் இந்த மண்ணிலே நடைபெறுகின்ற பல்வேறுபட்ட கொலைகள், அச்சுறுத்தல்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற இன அழிப்பு நடவடிக்கையினுடைய தொடர்ச்சியாகவே கபில்ராஜ்சுடைய மரணத்தையும் பார்க்கின்றோம். தொடர்ந்தும் இந்த மண்ணிலே மக்கள் மிக மோசமாக கொல்லப்படுகின்றார்கள்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் யுத்தம் முடிவடைந்து கடந்த போதும் ஒரு வெடிச்சத்தம் கேட்காத இந்த பிரதேசத்தில் இவ்வளவு பாரிய முகாம்களை வைத்து கொண்டு அந்த இராணுவ பிரசன்னத்தோடு மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சத்தனமான எதேச்சாதிகாரமான இனப்படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
இது ஒரு மனித பேரவலத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கி கொண்டிருக்கின்றது. மக்களுக்கு அச்சத்தை கொடுத்திருக்கின்றது. இதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதோடு கண்டனங்கள் தெரிவிப்பதோடு.
இது தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கான உரிமை பயணத்தில் நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை சரியான முறையில் பதிவு செய்வோம். இறந்த குறித்த இளைஞனினுக்கு நீதி கிடைக்க எப்போதும் எமது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த இளைறுனுக்கு வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான கே.காதர் மஸ்தானும் அஞ்சலி செலுத்தினார்.
உரிய தண்டனை
அவர், "கவலைக்குரிய விடயமும், கண்டனத்துக்குரியதும் இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. உயிரிழப்பு என்பது குறித்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று.
இதற்குரிய காரண கர்த்தா யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உடன் நிற்கின்றோம்.
ஏனைய மக்கள் பிரதிநிதிகளுடனும் கதைத்து இதற்கு மாவட்ட மட்டத்தில் ஒரு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு யோசித்திருக்கின்றேன். எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள கடையடைப்பிற்கு பூரண ஆதரவு வழங்குவீர்களா என வினவிய போது?
தனி கட்சி சார்ந்து இல்லாமல் எமது ஒற்றுமையை காட்டி இவ்வாறான ஒரு நிலமை மாவட்டத்திற்குள் மட்டுமல்ல முழு இலங்கையிலும் ஏற்படாதவாறு பாரிய எதிர்ப்பை காட்ட வேண்டும் அதற்கு எனது ஆதரவும், எமது கட்சி சார்ந்த ஆதரவும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.













