முல்லைத்தீவில் இடம்பெற்ற ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் கருத்தறியும் கூட்டம்
குருந்தூர் மலைக்கும் நீராவியடிக்கும் எதிராகப் போராடியவர்கள் தமிழர்கள் அல்ல, மத மாற்றச் சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ருத்ரசேனை என்ற இந்து அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பிரமுகரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கிராம சேவையாளருமான ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞானசார தேரரின் தலைமையில் இன்று (22) இடம்பெற்ற ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் கருத்தறியும் கூட்டத்திலேயே குறித்த செயலணியிடம் இவ்வாறு முறையிட்டுள்ளார்.
மேலும் கருத்தறியும் ஜனாதிபதி செயலணியிடம் கருத்து தெரிவித்த அவர்,
இங்கு நடைபெறும் மதமாற்றங்களைத் தடை செய்ய வேண்டுமாக இருந்தால் நாட்டில் மதமாற்றத் தடை சட்டம் உருவாக்கப்படவேண்டும்.
குருந்தூர் மலைக்கு எதிராகவும் நீராவியடிக்கு எதிராகவும் போராடியவர்கள் எவரும் திருக்கேதீஸ்வரம் பிரச்சனைக்கு எதிராகப் போராடவில்லை. இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை இவர்கள்தான் தமிழ் சிங்கள பிரச்சனையை உண்டாக்குவது இந்த மதமாற்றிகள் அதனை தங்களது அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.
முல்லைத்தீவில் தமிழர் மரபுரிமை பேரவை என்ற ஒரு அமைப்பு உள்ளது இந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரும் தமிழர்களே இல்லை தமிழர்கள் அல்லாத அவர்கள் எவ்வாறு தமிழர்களின் மரபுரிமையை பாதுகாக்கும் அமைப்பினர் எனக் கூறலாம்.
வன்னி மாவட்டத்தில் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களில் எவரும் தமிழர்கள் இல்லை என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியிடம் குறித்த இந்துசேனை பிரமுகர் தெரிவித்த போது குறுக்கிட்ட செயலணி உறுப்பினர்களில் ஒருவர் அப்படி இல்லை இந்து மதத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுத்து கருத்து தெரிவித்த இந்து அமைப்பின் பிரமுகர் இல்லை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் யூதர்களே எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட சமூக மட்ட உறுப்பினர்களிடம் மட்டும் ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன.
ஒவ்வொரு ஊடகவியலாளரின் பின்னாலும் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்ததோடு செயலணி தலைவரிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர்களையும் பௌத்த பிக்கு ஒருவர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் செயலணியிடம் கருத்து
தெரிவித்தவர்களின் கருத்துக்களை காணொளியாக்கிய ஊடகவியலாளர்
ஒருவரை செயலணியோடு வருகைதந்த பௌத்த பிக்கு உள்ளிட்டவர்கள் உடனடியாக ஒளிப்பதிவு
செய்தவற்றை நீக்குமாறு கோரி கமெராவை வாங்கி அந்த காணொளியை நீக்கியிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.