ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு
பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
நேற்று (30.05.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல்வாதிகளின் அரசியல் நலன்
அரசியல்வாதிகளின் அரசியல் நலன் கருதி பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைப்பதும் அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதையும் ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு முல்லைத்தீவு பொலிஸார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் பாணியில் நடத்திக்கொண்டமையை வன்மையாக கண்டிப்பதோடு எந்த ஒரு ஊடகவியலாளரையும் பொலிஸாரோ அல்லது வேறு எந்த அதிகாரத்தரப்போ அவர்களின் ஊடக சுதந்திரத்தில் கை வைப்பதை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளல் வேண்டும்.
ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைக்கும் செய்தியின் நம்பகத்தன்மையை நன்கு உறுதிபடுத்தியதன் பின்னரே அதனை செய்தியாக்குகின்றனர். இந்நிலையில் உண்மை செய்தியின் மூலத்தை கேட்பது உண்மையையும் அதன் நம்பக தன்மையின் சாட்சியையும் அழிப்பதற்காகவுமே. இதற்கு இடமளிக்க முடியாது.
பாலநாதன் சதீசனின் விடயத்தில் உண்மையை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அதற்கு எதிராக நடந்து கொண்டமை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவே தோன்றுகின்றது. இது தொடரக்கூடாது.
ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பு
மக்களோடு நிற்க வேண்டிய அரசியல்வாதிகள் மக்களுக்கு துரோகம் இழைப்பதையோ, மக்களுக்கு எதிராக செயல்படுவதையோ அங்கீகரிக்க முடியாது.

இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியான சமூகத்தை உருவாக்க பெரும் கடமை ஊடகவியலாளர்களுக்கு உண்டு. அந்த வழியில் நின்று பாலநாதன் சதீசன் கடந்த ஆண்டுகளாக ஊடக தர்மத்தின் அறம் காத்து மக்களுக்கான ஊடகவியலாளராக செயல்பட்டு வருகின்றார்.
இவருக்கும் இத்தகையோருக்கும் எதிராக அரசியல்வாதிகளோ அவர்களின் கையாட்களான பொலிஸாரோ செயற்படுவதை உடன் நிறுத்தல் வேண்டும்.
நேர்மையாக ஊடக தொழிலில் மக்கள் பக்கம் இருந்து மக்களுக்காக மக்களின் ஊடகவியலாளர்களாக செயற்படுவோரை பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கும் உண்டு என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.