முல்லைத்தீவு அடிப்படை வசதிகளற்று இயங்கும் பாடலை: நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை அடிப்படை வசதிகளற்ற நிலையில் மிகவும் மோசமான குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(30.01.2026) வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பாடசாலை நேரில் சென்று குறைபாடுகளை பார்வையிட்டுள்ளார்.
முறைப்பாடுகள்
இதன்போது, பாடசாலையின் நலன்விரும்பிகளின் முறைப்பாட்டிற்கு அமைவாக இவ்வாறு குறித்த பாடசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதாகவும், பாடசாலையின் சுற்றுப்புறச்சூழலையும், வகுப்பறைக்கட்டடங்களையும் பார்வையிட்டதுடன், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நலன்விரும்பிகளுடன் கலந்துரையாடி குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான வகுப்புக்களைக் கொண்ட குறித்த பாடசாலையில் 79மாணவர்கள் கவ்வி கற்று வருகின்றார்கள்.

இருப்பினும், குறித்த பாடசாலையின் சுற்றுப்புறச்சூழலும், வகுப்பறைக்கட்டடங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுவதாக பாடசாலையின் நலன் விரும்பிக்கள் மற்றும் பெற்றோரால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அத்துடன், இப்பாடசாலையில் மிகவும் பழமையான வகுப்பறைக்கட்டடங்கள் வெடிப்புக்களுடனும், கரைகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், பாடசாலையின் சுற்றுப்பறச்சூழல் நீர் தேங்கிய நிலையில், சேறும் சகதியுமாகக் காணப்படுவதால் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறைக்குச் செல்வதற்கு பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வகுப்பறைகளுக்குச் செல்வதற்கு பிரத்தியேகமாக சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான வழித்தடத்தினையே மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்துகின்றனர்.

எனவே, இத்தகைய சிறிய அளவிலான வழித்தடத்தினைப் படுன்படுத்துவதால் மாணவர்கள் வழித்தடத்திலிருந்து விலகி சேற்றுப் பகுதிக்குள் தவறி வீழ்கின்ற அபாயநிலை காணப்படுவதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, மாணவர்கள் பயன்படுத்துகின்ற கழிப்பறைளைச்சூழ சேறும் சகதியுமாகக் காணப்படுவதாலும், கழிப்பறைகளுக்கு செல்வதற்கு பாதுகாப்பான வழித்தட வசதிகள் எவையுமின்மையாலும் ஆசிரியர்களுக்கென அமைக்கப்பட்ட கழிப்பறைகளையே மாணவர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விளையாட்டு மைதானம் உட்பட சுற்றுப்புறச் சூழலெங்கும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் நுளம்புகள் பெருகி மாணவர்களுக்கு நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் அபாயங்கள் காணப்படுவதுடன், மாணவர்கள் இணைபாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, குறித்த பாடசாலையில் காணப்படுகின்ற வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டடங்களும் பழைய கட்டடங்களாகக் காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தான நிலை
இந்நிலையில் வகுப்பறைக் கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுவதையும், அந்தவெடிப்புக்களின் ஊடாக நீர் ஊற்றெடுத்து வகுப்பறைகளுக்குள் காணப்படுவதையும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பார்யிட்டார்.

பாடசாலையின் சுற்றுப்புறச்சூழல் மற்றும் வகுப்பறைக் கட்டடம் என்பன இவ்வாறு வெகுவாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுவதனால் இப்பாடசாலையில் மாணவர்களை இணைப்பதற்கு பெற்றோர்கள் அஞ்சுவதாகவும், இதனால் இந்த படசாலையின் மாணவர் எண்ணிக்கையும் குறைவடைந்து செல்வதாகவும் பாடசாலை நலன்விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பாடசாலையின் குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அங்கிருந்தவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.


