முல்லைத்தீவு விவசாய நிலங்களுக்கு உரம் பற்றாக்குறை
முல்லைத்தீவு மாவட்டத்தில், 5,000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு உரம் தேவை ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறுபோக பயிர்ச் செய்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர்களுக்கு வழங்குவதற்கு 5000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு உரம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், கமநல சேவை நிலையங்களுக்கு தேவையானளவு உரங்கள் வரவில்லை எனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக, தற்போது பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதில் நெருக்கடி எதிர்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
கொழும்பில், யூரியா பசளைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அறிய முடிவதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், குமுழமுனை கமநல சேவை நிலையத்தின் ஊடாகத்தான் அதிகமான பசளை விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டியுள்ளதெனவும் பசளையை மாவட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.