முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம்! காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் இணைவு (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஒ.எம்.பி) பங்கெடுத்துள்ளதாக அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெயகநாதன் தற்பரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒரு தரப்பாக இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள்
சார்பாக குடும்பங்கள் சார்பாக இங்கு அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களுக்கும், காணாமல்போனவர்களுக்கும், தொடர்பு இருக்குமா என்பது சம்பந்தமாக ஆரம்ப கட்ட விசாரணையில் ஒரு
தரப்பாக இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த வழக்கு தொடர்பில் மூன்று விடயங்களை முன்வைத்துள்ளோம். ஒன்று அடிப்படைதராதரங்கள் மதிக்கப்பட வேண்டும். இங்கு எடுக்கப்படுகின்ற சான்று ஆதாரங்கள் பாதுகாப்பான முறையில் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். உரியமுறையில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.அதன் முடிவுகள் வெளிப்படையுடன் மக்களுக்கு அறியத்தர வேண்டும்.
இரண்டாவது அடிப்படை தராதரங்கள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் இணைந்து செயற்படும் என்ற உத்தரவாதத்தினையும், மூன்றாவதாக ஏற்கனவே வவுனியா மாகாண நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டதன் படி மக்களின் பங்களிப்பு மக்களின் தீர்மானங்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தோம்.

அதற்கான பிரதிகளையும், சான்றுகளையும் நீதிமன்றில் நீதவானிடம் பாரப்படுத்தி அதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளோம். அதன் ஒரு கட்டமாக இந்த முன்னாயத்த பணிகளில் சான்றுகள் எடுக்கும் பணிகளில் இணைந்து பணியாற்றி இருந்தோம்.
இதன் அடுத்த கட்டமாக உறுதியான முடிவுகள் இங்குள்ள மனித எச்சங்களுக்கும் காணாமல்போனவர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் இருந்ததா போன்ற விடயங்களில் கூடுதலாக இணைந்து செயற்படக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |