சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள்
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு அருகில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையொன்றினை நேற்று (30.03.2026) ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முறைப்பாடு
இந்நிலையில் இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என உரிய தரப்பினர்களிடம் பல தடவைகள் முறையிட்டுள்ள போதும் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்தோடு இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிட்டபோது, குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மிடம் போதிய ஆளணி வசதிகள் இல்லையெனத் தெரிவித்ததுடன், எனவே தம்மால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தமுடியாதெனத் தெரிவித்ததாகவும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்தகைய சூழலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்த வலியுறுத்தியே முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து இவ்வாறாக தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு முல்லைத்தீவிற்கு கடற்றொழில் அமைச்சர் இன்று வருகைதரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வாறு வருகைதருகின்ற கடற்றொழில் அமைச்சர் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தமக்கு முறையான தீர்வினை வழங்கவேண்டுமென கடற்றொழிலாளர்கள் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

தவறினால் தமது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு கடற்றொழிலாளர்களால் தொடர் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் இடத்திற்கு அதிகளவான பொலிஸார் பேருந்தில் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri