இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: போராட்டம் நடத்தப்படும்! முகமட் ஆலம் எச்சரிக்கை
இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ்நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என்றும் இந்த விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால் அவருக்கெதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார் மற்றும் தீவகம் ஆகியவற்றின் கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா அரங்கில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விதிமுறைகளை மீறும் கடற்றொழிலாளர்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பெரும் பேசுபொருளாக உள்ள கரைவலை தொழில் நடைமுறைகள் தொடர்பாக, குறிப்பாக தமிழகம் காரைக்காலில் இருந்து எல்லைத் தாண்டி வருகின்ற கடற்றொழிலாளர்கள் காரணமாக நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றோம். அதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களும் இணைந்து கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகம் முன் கரைவலை தொழிலை அனுமதிக்குமாறு கோரி சிலர் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். அப்போது, குறித்த தரப்பினரை ஜனாதிபதி சந்தித்தபோது, நாட்டிலுள்ள சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.
மேலும், சட்டத்தை மீறி அனுமதிக்கப்படாத ஒரு தொழிலை செய்ய அனுமதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர்களுக்கு விளக்கினார். அத்துடன், தொழில் விதிமுறைகளை மீறும் எந்த தொழிலும் அரசால் தடுக்கப்பட்டிருந்தால், அந்த தொழில்முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என நாங்களும் வலியுறுத்தினோம்.
ஏனையவர்களுக்கு பாதகம் ஏற்படும் என்பதை அறிந்தே கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க அரசு அதைச் சட்டமாக்கியுள்ளது. ஒருசிலரின் தேவைக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்பதற்காகவும் எந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்முறையையும் ஏற்க நாங்கள் தயாரில்லை.

அதேவேளை, சட்டரீதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்களில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது தடங்கல்கள் குறித்து அவர்களுக்காக எந்த நேரத்திலும் குரல் கொடுக்க நாம் தயங்கமாட்டோம். அடுத்தவர்களுக்கோ அல்லது கடல் வளங்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் தொழில்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அநுரவின் பயணத்தில் இதற்கும் வாய்ப்புள்ளது..
கரைவலை தொழில் அரசால் எவ்வாறு நிறுத்தப்பட்டதோ, அதேபோல் ஏனைய பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்களும் நிறுத்தப்பட வேண்டும்.
இதனிடையே, காரைக்கால் கடற்றொழிலாளர்களின் இரண்டு படகுகள் அண்மையில் 25 பேருடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களின் தொடர் வருகை யாழ்ப்பாணத்திலிருந்து தற்போது மன்னாரின் தெற்குக் கடல் பகுதிகள், குறிப்பாக புத்தளம் வரை அதிகரித்துள்ளது.
இது எமது நாட்டின் கடற்றொழிலாளர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த விடயத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகின்றது. அதேநேரம், கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் தொடர்பான விடயங்களைத் தவிர ஏனைய அனைத்திலும் தீவிரமாக செயல்படுகிறார்.

ஆனால் எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக டிட்வா புயலுக்குப் பிறகு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இருந்தபோதிலும், அமைச்சர் இதுகுறித்து எதுவும் பேசவில்லை.
கடற்றொழில் அமைச்சர் அசட்டுத்தனமாக தொடர்ந்து செயல்பட்டால், அவருக்கு எதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும். ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளார். அவர் வேறு ஒரு காரணத்திற்காகச் சென்றிருந்தாலும், எல்லைத் தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை குறித்து ஏதாவது வகையில் கலந்துரையாட வாய்ப்பு உள்ளது.
எனவே, சட்டவிரோதமாக அரசால் தடுக்கப்படும் எந்த தொழில்முறையாக இருந்தாலும் அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என வலியுறுத்தியுள்ளார்.
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam