ஊழியர்களுக்கான பதவிகளை குடும்பத்திற்குள் பகிர்ந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 வீதமானவர்கள், தமது ஊழியர்களாக மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களை நியமித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாக 6 பேரை நியமிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இவர்களில் அதிகாரி மற்றும் ஊழியருக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை அரசாங்கம் மாதாந்தம் வழங்கி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஊழியர்கள் குழுவில் தனிப்பட்ட செயலாளர், ஆய்வு அதிகாரி, இரண்டு சாரதிகள், எழுதுவினைஞர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தமது தனிப்பட்ட செயலாளர்களாக தமது மனைவிகளையே நியமித்துள்ளனர். தனிப்பட்ட ஊழியர்கள் குழுவிற்கு கிடைக்கும் பணத்தை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்வதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் யோசனைக்கு அமைய அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் கீழ் உள்ள நாடாளுமன்ற விவகார பிரிவே இந்த நியமனங்களை வழங்குகிறது.
இதனிடையே அமைச்சர் ஒருவர் தனது தனிப்பட்ட ஊழியர்கள் குழுவிற்கு ஒரு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 12 பேரை நியமித்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்றத்தின் தகவல்கள் கூறுகின்றன.