திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களின் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கஞ்சிகுடியாறு,தங்கவேலாயுதபுரம், பாலக்குடா, காயத்திரி கிராமம் ஆகியவற்றின் பிரதேச விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இச்சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் கஞ்சிகுடியாறு மற்றும் தங்கசேவலாயுத புரம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மீனவர் சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன்போது பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
பிரதேசத்தில் வலதுகரை வாய்க்கால் அமைப்பு, யுத்ததால் புலம்பெயர்ந்த மக்கள் உரிய முறையில் மீள்குடியேற்றப்படாமை, இரண்டு லெட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம் அறைகுறையில் இருக்கின்றமை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் நிலைமை,சுயதொழில் ஊக்குவிப்புச் செயற்திட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தெரியப்படுத்தியிருந்தனர்.
அதன் பின்னர் திருக்கோவில் காயத்திரி கிராமம் மற்றும் பாலக்காடு போன்ற பிரதேசங்களின் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன்போது பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்,பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக உதவித் திட்டங்கள்,சுயதொழில் ஊக்குவிப்புகள், குடிநீர்ப் பிரச்சினை போன்றன தொடர்பில் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயங்கள் தொடர்பிலாக உரிய அமைச்சுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன்,வாலதுகரை வாய்க்கால் தொடர்பில் மாகாண திணைக்களத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆவன செய்வதோடு, தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை நிருவாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் பிரதேசக் கிளையின் தலைவர் கலாநேசன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் உட்பட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக்கிளை நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தேர்தலின் போதும், தேர்தலின் பின்னரும் கட்சியின் செயற்பாடுகள்,கட்சியின் பின்னடைவு, ஏற்பட்ட பின்னடைவினை நிவர்த்தித்தல், வட்டாரக் கிளைகள் மற்றும் பிரதேசக் கிளை புனரமைப்பு, இளைஞர்களை உள்ளீர்த்தல், பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள், நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீடு போன்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.