யாழில் 21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு!
யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(7) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கடந்த ஐப்பசி மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.

குழந்தையை பிரசவித்த பின்னரான 32 நாட்களில் இரண்டு நாட்கள் கண் விழித்து பார்த்த நிலையில் ஏனைய அனைத்து நாட்களும் மயக்க நிலையிலேயே அவர் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
அவர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் குடல் மற்றும் ஈரல் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.