மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சிற்றுண்டி சாலையின் அவல நிலை!
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சிற்றுண்டி சாலையின் அவல நிலை குறித்து மன்னார் நகர சபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் சுகாதார குழு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலை சூழல் மற்றும் பொது வைத்தியசாலையின் கீழ் குத்தகை அடிப்படையில் இயங்கும் சிற்றுண்டி சாலையில் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் நிலவுவதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதனையடுத்து, மன்னார் நகரசபை சுகாதார குழு உறுப்பினர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் தலைமையில் வைத்தியசாலைக்குச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக மனித கழிவுகள் சிற்றுண்டி சாலை வளாகத்தில் காணப்பட்டமை,கழிவுநீர்,மலக்கழிவுகள் திறந்த பகுதியில் விடப்பட்டமை,அதிகளவான இலையான்கள்,துர்நாற்றம்,ஒழுங்கற்ற கழிவகற்றல்,நுளம்பு பெருக்கத்திற்கு சாதகமான சூழல்,கழிவு நீர் வாய் கால்களில் புழுக்கள்,உணவு பொருட்கள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்த படாமை,அழுக்கான சமையலறை,கழிப்பறை தொட்டிகள் மூடப்படாமை உள்ளடங்களாக பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த சிற்றுண்டி சாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படவுள்ளதுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

