நானுஓயாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வானுடன் லொறி மோதி விபத்து!
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் நானுஓயா குறுக்கு வீதி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வானுடன் லொறி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிவவருகையில், நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியிலிருந்து டெஸ்போட் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வானுடன் நானுஓயா பிரதான நகரில் இருந்து எதிர்த்திசையில் பயணித்த லொறி மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாரதி கைது
விபத்தில் 2 பாடசாலை மாணவர்களும் , பெற்றோர் ஒருவரும் உள்ளடங்கலாக 3 பேர் காயமடைந்த நிலையில் நானுஓயா ஆரம்ப பிரிவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் விபத்துடன் தொடர்புடைய லொறின் சாரதியின் கவனக்குறைவினால் விபத்து சம்பவித்திருக்கலாம் என தெரிவித்த நானுஓயா பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



