வடக்கு கிழக்கின் பல பகுதியில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video)
இலங்கையிலிருந்து இந்திய படையினை வெளியேறக்கோரியும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வடக்கு கிழக்கின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்னைபூபதியின் குடும்ப உறவுகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை கொண்ட ஏற்பாட்டுக்குழுவால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதை முன்னிட்டு இன்று (19.04.2023) மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு செய்தி- ஆஷிக்
யாழ். பல்கலைக்கழகம்
யாழ். பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையிலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அன்னை பூபதியின் உருவபடத்திற்கு ஈகை சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு அன்னைபூபதியின் நினைவுரையும் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சிவ்வெஸ்டார் ஜெல்சின், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்.நல்லூர்
யாழ். நல்லூரில் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் காலையில் ஆரம்பமாகியிருந்தது.
தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும் எனவும், அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மன்னார்
இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தியாக தீபம் அன்னை பூபதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்போது கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை தியாக தீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர்,உப தவிசாளர், உறுப்பினர்கள் மத தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மன்னார் செய்தி- சான்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டுப்பிரதேசத்தில் நீலன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வும் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு செய்தி- கீதன்
கிளிநொச்சி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவேந்தல் தொடர்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது கிளிநொச்சி சேவைச் சந்தைக்கு முன்பாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தி- யது
யாழ்ப்பாணம்
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் -தீபன்

















புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
