மட்டக்களப்பில் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு- பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வீடு மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்காதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் நேற்று(16.03.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில், உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.
ஏற்கனவே, டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்கபட்டுள்ளது. வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன.
அதேவேளை, சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர். எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும்.
டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும்.
ஆலய நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடிக்கை
அண்மையில் செங்கல பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், ஒரு பிரபல ஆலயத்தை தொடர்பு கொண்டு ஆலய சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறும் எங்களது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தலை வழங்குமாறு கேட்டபோது அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

அந்த ஆலய மதகுரு உட்பட ஆலய சூழல் டெங்கு நோய் பரவும் சுற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது.
எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலயங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை
அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம்.
இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது.

எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம் எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்நிலையில், தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அணுகியுள்ளோம். வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார்.