மட்டக்களப்பில் அதிக தொற்றாளர்கள் - இரண்டு கிராம சேவையாளர் பிரிவினை முடக்க தீர்மானம்
மட்டக்களப்பு பிராந்தியத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 18 பேர் கோவிட் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இரண்டு கிராமங்களை முடக்குவதற்கான பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவு பகுதியைச் சேர்ந்த 15 பேரும் ஓட்டமாவடி, செங்கலடி, வெல்லாவெளி சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூன்றாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 375 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 07 பேர் மரணமடைந்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன் ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற கோவிட் மரணத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கிரான்குளம்
பகுதியில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளைத் தனிமைப்படுத்துவதற்காகப் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
