மாத வருமானம் ஒரு பில்லியன் டொலர் : செலவு 1.3 பில்லியன் டொலர்
இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற திட்டமட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நிதியமைச்சர் தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நிதியமைச்சர் உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
இதனை தவிர இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவுள்ளன.
இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாது தீர்த்துக்கொள்வதற்கான வழியாக இந்தியாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் கடனை பெறுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை தற்போது மாதாந்தம் ஏற்றுமதி வருமானமாக ஒரு பில்லியன் டொலர்களை ஈட்டி வருகிறது. எனினும் இலங்கைக்கான அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய 1.3 பில்லியன் டொலர்கள் மாதாந்தம் செலவிடப்படுகிறது.
அடுத்த ஐந்து மாத காலத்திற்காவது வர்த்தக தட்டுப்பாடுகளை ஈடு செய்வதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் 1.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற திட்டமிட்டுள்ளது.