வவுனியா சந்தை வீதியில் நவீன இறைச்சி கடைகள் உருவாக்கம்!
வவுனியா சந்தை வீதியில் அமைந்துள்ள நகரசபையின் பொதுமலசலகூடம் அமைந்துள்ள பகுதியில் நவீன வசதியுடன் கூடிய இறைச்சிக்கடைகள் அமைக்கப்படவுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் இன்று தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள மலசலகூடத்தில் பல்வேறு சமூக சீர்கேடான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக பல தரப்பினர்களாலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் தற்போது கோழிஇறைச்சி விற்பனை நிலையம் இயங்கிக்கொண்டிருக்கும் குளத்திற்கு அருகான பகுதியும், ஒதுக்குப்புறமாக இருக்கிறது.
அந்த பகுதியிலும் சமூக சீர்கேடான சம்பவங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், பெண்கள் அந்த பகுதிக்கு சென்று கோழிஇறைச்சியினை கொள்வனவு செய்யும் நிலையும் குறைவாகவே காணப்படுகின்றது.
இவை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமையவும், பொதுமக்களின் வசதிகருதியும் சந்தைவீதியில் அமைந்துள்ள நகரசபையின் பொதுமலசலகூடத்தினை அகற்றி அங்கு நவீன வசதிகளுடன்கூடிய, இறைச்சிக்கடைகள் (மாடு,ஆடு,கோழி) மற்றும் புதிய மலசலகூடம் ஒன்றையும் அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.
குறித்த திட்டத்திற்காக முதற்கட்டமாக உலக வங்கியிடமிருந்து 70 இலட்சம் ரூபாய் பணம் கிடைக்கப்பெறவுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குறித்த திட்டத்தினை விரைவாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.