நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ளார்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் (12) இன்று இடம்பெற்ற நடமாடும் சேவையில் பெருமளவான மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவையொன்று இன்றைய தினம் (12 ) பிரதேச செயலாளர் திரு ஆர்.நிசாந்தன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் திரு ப. பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பொது மக்களின் பிறப்பு, இறப்பு, விவாகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினார்.
இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்,100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளும்,30 பெண்களுக்கு சாறிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் காலம் கடந்த பிறப்பு பதிவுகள், இறப்பு பதிவுகள், திருமண பதிவுகள், உத்தேச வயது பத்திரங்கள் என்பன பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவை நிகழ்வில் 200 வரையான குடும்பங்கள் பயனடைந்துள்ளார்கள் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மேலதிக மாவட்ட பதிவாளர், நன்னடத்தை உத்தியோகத்தர், கிராமிய பதிவாளர், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





