மட்டக்களப்பு- அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு நடமாடும் கல்விச் சேவை ஆரம்பம்
மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நடமாடும் கல்விச் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வானது நேற்று (28) வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம், மற்றும் காக்காச்சி வட்டை விஷ்ணு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் நடமாடும் விஞ்ஞான, கணனி ஆய்வு கூட கல்விச் சேவை முதன் முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நடமாடும் கல்விச் சேவை
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் கடந்த 15 வருடங்களாக இனி பாவனைக்கு பயன்படுத்த முடியாது என கைவிடப்பட்டிருந்த நடமாடும் விஞ்ஞான கணனி ஆய்வு கூட வாகனம் வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் முயற்சியினால் மீள் இயங்கு நிலைக்கு கொண்டு வரப்பட்டு மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைக்காக சேவைக்கு தற்போது விடப்பட்டுள்ளது.
அந்த வகையில் போரதீவுப்பற்று கல்விக் கோட்டத்திலுள்ள காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயம், மற்றும் ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம் ஆகியவற்றிலுள்ள மாணவர்களுக்கு இந்த நடமாடும் கல்விச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு செயன் முறை மூலம் விஞ்ஞான,கணிணி பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையினால் 15 வருடங்களுக்குப் பின் நடைபெறும் இந்த நடமாடும் கல்விச் சேவையினை பெற்றோர்கள், கல்வியாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





