மைத்திரி ஆட்சியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட பணம்! முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு
2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ச்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
முறைப்பாடு
2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி அலுவலகத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, தமது சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கட்டுமானம் 2019 ஜனவரியில் ஆரம்பித்தது. இருப்பினும், வளாகத்தில் இருந்த பல வியாபாரத்தளங்கள், கதவுகள், ஜன்னல்கள், கூரைத் தகடுகள் மற்றும் இருக்கைகள் அகற்றப்பட்டு, பின்னர் காணாமல் போயுள்ளன.
இந்தத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 130 மில்லியன் ரூபாய்களாகும். இந்தநிலையில், ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டது, ஆனால் இன்றுவரை அந்த திட்டம் முழுமையடையாமல் உள்ளது என்று முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
