முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடி
நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவு மாவடடத்தில் இராணுவத்தினரின் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு நகர் பகுதிக்கு செய்தி அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்கள் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையிரின் வீதி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். குறிப்பாக பொலிஸார் அனுமதி வழங்கினாலும் ,குறித்த பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு செய்தி அறிக்கையிடலுக்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.தான் ஊடகவியலாளர் மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கு அமைய செய்தி சேகரிக் செல்வதாக படையினருக்கு தெரிவித்த போதும் படையினர் ஊடகவியலாளர் முல்லைத்தீவு நோக்கி செல்வதற்கான அனுமதியினை மறுத்துள்ளதுடன் ,கடமையில் நின்ற முள்ளியவளை பொலிஸாரிடம் ஊடகவியலாளர் அடையாளப்படுத்தியபோதும் படையினர்கள் ஊடகவியலாளரை செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.
குறித்த வீதி ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனையவர்கள் மற்றும் பலர் தங்களை அடையாளப்படுத்தி சென்று வருக்கின்ற நிலையில், ஊடகவியலாளருக்கே இராணுவத்தினர் தடை விதிக்கின்றனர். இவ்வாறான நிலையில் இன்று பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முல்லைத்தீவு நகருக்கு செய்தி சேகரிக்க சென்ற மற்றுமொரு ஊடகவியலாளர் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவுக்கு சென்ற மற்றுமொரு ஊடகவியலாளரையும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் .ஊடகங்களுக்கு அனுமதி உள்ளதாக தெரிவித்த போதும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
இதன்பின்னர் குறித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியை அழைத்து ஊடகவியலாளர் கலந்துரையாடி ஊடகவியலாளருக்கு செல்ல அனுமதி உள்ளது என தெரிவித்த போது பொலிஸ் அதிகாரி அனுமதித்த போதும், இராணுவம் அனுமதிக்கவில்லை .தொடர்ந்து ஊடகவியலாளர் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து விடயத்தை தெரிவித்தபோது பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த பகுதியில் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிக்கு ஊடகங்களுக்கு அனுமதி உள்ளது அவர்களை செல்ல அனுமதிக்குமாறு கூறியபோதும் அவர் தனது உயரதிகாரிகளுடன் பொலிஸ் பொறுப்பதிகாரியை கலந்துரையாடுமாறும், தான் அனுமதிக்கமாட்டேன் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சுமார் 15 நிமிடங்களில் பின்னர் உரிய தரப்புக்களின் உத்தரவுக்கமைய ஊடகவியலாளரின் விபரங்களை பதிவு செய்து கொண்டு ஊடகவியலாளரை முல்லைத்தீவு செல்ல அனுமதித்துள்ளனர். முல்லைத்தீவில் மாத்திரம் இராணுவத்தினர் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறு கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








